ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மண்டியிட்டார் வடக்கு ஆளுநர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்புத் தொடர்பாக, தாம் கூறிய விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் தவறாக மேற்கோள்காட்டப்பட்டு, தவறாக பிரசுரிக்கப்பட்டிருப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தம்மைச் சந்தித்த போது ஒப்புக் கொண்டிருந்தார் என்றும், அது தொடர்பான தனது அதிகாரிகளைக் கண்டித்தார் என்றும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, வடக்கு ஆளுநர், வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இருந்து திரும்பிய பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “நேர்காணலின் சில பகுதிகள் துருதிஷ்டவசமாக,  குறிப்பாக ஆங்கில ஊடகத்தில், மொழியாக்கம் அல்லது தெரியாத காரணங்களால், உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது வருத்தத்துக்குரியது.

எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன் இடம்பெற்றன.

மனித உரிமை ஆணையாளர் பசெலெட் அம்மையார் முன்மாதிரியான இராஜதந்திர ஒழுங்கையும் திறன்களையும் வெளிப்படுத்தியவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments