இரட்டைக் கருப்பைகள்! 2 மாத இடைவெளியில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இரட்டைக் கருப்பைகள் மூலம் இரண்டு மாத இடைவெளியில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

பங்களாதேஷின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதியிலுள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய அரிபா சுல்தானா இதி என்ற பெண்ணே இக்குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்.

கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றபோது இவருக்கு இரட்டைக் கருப்பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தவருடம் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அவர் ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.

கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றைய கருப்பை மூலம் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சர்வதேச செய்திச் சேவைக்கு மருத்துவர் டிலீப் ரோய் கருத்துரைக்கையில்:

30 வருட எனது மருத்து சேவைக்காலத்தில் இப்படியான நிகழ்வைப் பார்க்கவில்லை. மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நான் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேள்விப்படவும் இல்லை எனத் தெரிவித்தார்.

தாய் அரிபா சுல்தானா இதி தெரிவிக்கையில்:-

நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என்னுடைய மூன்று குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். நாங்கள் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் மாதம் 6000 ராக்கா (70 அமொிக்க டொலர்) உழைக்கின்றார். இது எங்களுக்குப் போதுமானது இல்லை. இருந்தாலும் நாங்கள் இச்சிறு தொகையை வைத்து சமாளிப்போம் என்றார்.

கணவர் சுமோன் பிஸ்வாஸ் கூறுகையில்:-

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இது அல்லாவிடம் இருந்து கிடைத்த ஒரு அதிசயம். என்னுடைய பிள்ளைகள் நலமாக இருக்கின்றார்கள். நான் எங்கள் மகிழ்சியான வாழ்க்கைக்கு தேவையானதை முடிந்தளவு செய்வேன் என்றார்.

No comments