மகிந்த அணியின் இரகசிய சந்திப்புக்களை போட்டுடைத்த கனேடிய தூதுவர்


சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத நிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ச மற்றும் கனடியத் தூதுவருக்கு இடையிலான கீச்சகப் பதிலடிகள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன சர்வதேச இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்புகளை விமர்சிக்கும் வகையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கீச்சகப் பதிவு ஒன்றை நேற்று இட்டிருந்தார்.

அதில் அனைத்துலக சமூகத்தைச் சந்திப்பதை விட, பொதுமக்களைச் சந்தித்து, தேர்தலுக்கு தயாராகும்படி கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில் அவர், “உங்களின் பொதுஜன முன்னணி கட்சி சகாக்கள் சிலர் யாரைக் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, அவர்களிடம் நீங்கள் கேட்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவு கோரி, , சிறிலங்கா பொதுஜன முன்னணியினர் இரகசியமான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதையே கனேடியத் தூதுவரின் இந்தக் கருத்து, வெளிப்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

No comments