அரசியல் கைதிகளை பாரிய குற்றவாளிகளென்கிறார் சார்ள்ஸ்!


அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலைக்கழக மாணவர்களின்  பேரணி தொடர்கின்ற நிலையில் அவர்களுடன் பாடசாலை மாணவர்கள்,மதத்தலைவர்கள்,ஆசிரிய சமூகமென பலரும் இணைந்துள்ளனர்.

இதனிடையே சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்களினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியாயப்படுத்துவது தொடர்பில் அரசியல் கைதிகள் சீற்றமடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10), பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

கூட்டமைப்பின் சார்ள்ஸ் எம்.பி, “2001, 2002ஆம் ஆண்டுகளில், அப்போதைய அரசாங்கத்தாலும் பிரபாகரனாலும் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது நீங்கள் பிரதமராக இருந்தீர்கள். அன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருந்தது. ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. இருப்பினும், அச்சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இதனால், அரசியல் கைதிகள் 107 பேர் இன்று வரையில் சிறையில் உள்ளனர்.

“ஆகவே, இவர்களது விடுதலை குறித்து ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர், ஒரே மேசையில் அமர்ந்து கட்சி பேதமின்றி கலந்துரையாடலை மெற்கொள்ள முடியுமா?” என வினவியாதோடு, “2001ஆம் ஆண்டு, பாரதுரமான குற்றமிழைக்காத சிலரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரும், விடுதலை செய்யப்பட்டனர்.

“அதேபோல், 2002ஆம் ஆண்டிலும் சிலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், மனிதப் படுகொலை உள்ளிட்ட பாரிய குற்றங்களை இழைத்த பலர், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்” என்றும் சார்ள்ஸ் எம்.பி தெரிவித்தார். 
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எவ்வாறாயினும், கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே தம்மீதான பொய்க்குற்றச்சாட்டுக்களிற்கு எதிராக போராடிவருகின்ற அரசியல் கைதிகளை மனிதப் படுகொலை உள்ளிட்ட பாரிய குற்றங்களை இழைத்தவர்களென அடையாளப்படுத்தியுள்ளமை தொடர்பிலேயே அவர்கள் தமது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments