பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் - மேஜர் தர அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை


ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிரிதல சிறிலங்கா இராணுவப் புலனாய்வு முகாமில் பணியாற்றிய மேஜர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

AH 94 என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்பட்ட இராணுவ அதிகாரியையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட மேஜர் தர அதிகாரி காணாமல் போன அறிக்கை ஒன்றை ஒருங்கிணைத்துள்ளார் என்றும், அது இரண்டாவது சந்தேக நபரான கேணல் சிறிவர்த்தனவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

AH 94 என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்பட்ட இராணுவ அதிகாரியின்  உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துமாறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.

ஆனால், அவ்வாறு எந்த இராணுவ அதிகாரியும் கிரிதல முகாமில் பணியாற்றவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவையும், நீதிமன்றத்தையும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தியிருந்தனர்.

கடந்த 19ஆம் நாள் நடந்த விசாரணையில் சந்தேகநபர் பற்றிய விபரங்கள் தெரியவந்த நிலையில், அவர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments