விமானக் கொள்வனவில் தரகுப்பணம்


இலங்கைக்கு நேற்று (30) இறக்குமதி செய்யப்பட்ட எயார் பஸ் 321 ரக விமானக் கொள்வனவில், பாரிய தரகுப் பணம் பரிமாறப்பட்டுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேன கூட்டுறவுக் கலாசார நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கத்தால், விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், தற்போதைய அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, இந்த மக்கள் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமையால், இலங்கை விமான நிறுவனத்தால் 1,750 மில்லியன் ரூபாய் மக்கள் பணம், அந்த நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

"புதிய விமானம் ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படின், முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய விமானத்தைக் கொள்வனவு செய்திருக்க முடியும். எனினும் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, மூன்று மணித்தியாலங்களுக்குள் 321 எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த விமானத்தைக் கொள்வனவு செய்துள்ளனர். இந்த கொள்வனவில் பாரிய தரகுப் பணம் கைமாறப்பட்டுள்ளது" எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

No comments