சிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வானது, உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (18 – 05 – 2018) மாலை ஏழு மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தில் தொடங்கிய இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சுடரேற்றலின்போது, தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் இசை பின்னனியில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவுநாள் பொதுப்பீடத்திற்கு, ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒரு மணிநேரமாக நடைபெற்றது.

தொடர்ந்து நினைவுரையை, முள்ளிவாய்க்காலில் மருத்துவராக கடமையாற்றி நான்கு ஆண்டுகளாக சிறிலங்கா தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அருணகிரிநாதன் அவர்கள் வழங்கினார்.

அவர் தனதுரையில், இனவழிப்பு என்பது தனியே கொலைகள் மட்டுமல்ல எனவும் ஒரு இனத்தை பகுதியாகவோ முழுமையாகவோ பல்வேறு வழிகளில் அதன் சுதந்திரத்தை மறுத்து அதன் மீது அழுத்தங்களை மேற்கொண்டு விரட்டுவது உட்பட இனவழிப்பு தான் எனவும் அத்தகைய பாரிய இனவழிப்பை முள்ளிவாய்க்காலில் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதை நினைவுகூர்ந்தார்.

மேலும் உணவுக்கு வழியின்றி கஞ்சிக்காக வரிசையில் நின்ற மக்கள் கொல்லப்பட்டதையும், காயப்பட்டவர்களை ஏற்றிச்சென்று பொன்னம்பலம் வைத்தியசாலையில் விடப்பட்ட நிலையில், அங்கு விமானதாக்குதல் மூலம் திட்டமிட்டு கொல்லப்பட்டதையும் கொத்துக்குண்டுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு மக்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஆங்கிலத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தொடர்பான சிறுஉரையை அபிசா யோகன் வழங்கி, அதில் தான் ஐந்து வயதிலிருந்து தனது குடும்பத்துடன் தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டங்களில் பங்குகொண்டுவந்தபோதும், அதன் உண்மையான பக்கங்களை இப்போதுதான் புரிந்துகொண்டுள்ளதாகவும், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து “முள்ளிவாய்க்கால் - உறுதியின் முகவரி” என்ற காணொளி அகன்ற திரையில் திரையிடப்பட்டது. அதில் தமிழ் மக்களுக்கான நீதிக்கான அரசியல் போராட்டத்தையும் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களையும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது.

தொடர்ந்து இளையோர்களால் உலகளாவிய ரீதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிக்கான போராட்டம் பற்றிய விளக்கத்தை இளையோர் அமைப்பைச் சேர்ந்த ஜெனனி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து நினைவுநாள் உணர்வுகளை சுமந்த மூன்று பாடல்களை முறையே பைரவி பாவலன் மற்றும் ரமேஸ் ஆகியோர் பாடினர். உணர்வுமிக்கதான் அப்பாடல்கள் அனைவரின் நெஞ்சங்களையும் தொட்டது.

அதனைத்தொடர்ந்து “ஓலம் கேட்பதோ …” என்ற பாடலுக்கு நடன நிகழ்வை இளையோர்கள் வழங்கினர்.

நினைவுநாளின் சிறப்புரையாற்றிய மருத்துவரும் சமூகசெயற்பாட்டாளருமான மனமோகன் அவர்கள், தாயகத்தில் வாழும் ஆதே எண்ணிக்கையான தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவருவதாகவும் சரியான முறையில் ஒருங்கிணைப்பை மேற்கொண்டால் தாயகத்தில் உரிய முன்னேற்றத்தை காணமுடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தாயக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துல் மற்றும் தகைமை மேம்படுத்தல் என்பவற்றில் கவனம் செலுத்துவதோடு, நேர்வழி தவறும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி நேர்ப்படுத்துவற்கான அழுத்தத்தையும் பிரயோகிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.












No comments