ஜெயச்சித்திரா:விசாரணைக்காக மீண்டும் அழைப்பு?

 




இலங்கைத் தமிழரசுக்கட்சி,  கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் குழு உறுப்பினரும், கிராஞ்சி  தயாநந்தன் ஜெயச்சித்திரா கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (TID) விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். 

கடந்த கால அரசாங்கங்களைப் போலவே, மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் அதே பாணியில் தொடர்வதை இந்த நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.. 

இது குறித்துக் காவல்துறை வழங்கிய அழைப்பாணையில், எதிர்வரும் 2026.04.07 அன்று காலை 10:00 மணிக்கு கொழும்பிலுள்ள விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தயாநந்தன் ஜெயச்சித்திரா  குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவால் (TID) மூன்றாவது முறையாகவும்  விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்படுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு ஒரு தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளரைத் தொடர்ச்சியாகக் கொழும்புக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​கடந்த கால ஆட்சியாளர்களின் கொள்கைகளையே தற்போதைய அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்டு வருவதோடு, இவ்வாறான அநீதியான செயல்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவது பாரிய ஜனநாயக விரோதச் செயலாகும்.

​தமிழ் மக்களின் அரசியல் குரல்களை நசுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

No comments