1400 கோடி போதைப்பொருள்:கடற்படையும் பின்னாலே!
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1400கோடி இலங்கை ரூபா பெறுமதியான போதைப்பொருள் வர்த்தகத்தில் இலங்கை கடற்படை அதிகாரிகள் சிலரும் பின்னணியிருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு விசாரணைகளில் அவற்றினை யாழ்ப்பாணம் ஊடாக கடல்வழியே எடுத்துச்செல்ல இலங்கை கடற்படை அதிகாரிகளே உதவிவருவதாக தெரியவந்துள்ளது
சென்னையில் 56 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த உதயகுமார், சென்னை பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக கடந்த 10ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை போதை தடுப்புப்பிரிவு பொலிஸார் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் மேற்கொண்டு விசாரணையில், பெரம்பூரில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றதாக கூறினார். இதன் அடிப்படையில் அங்கு சென்ற போதை தடுப்புப்பிரிவு பொலிஸார் அக்பர் அலி என்பவரை கைது செய்தனர்.
அவர்கள் மொத்தமாக பதுக்கி வைத்திருந்த 54 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி போதைப்பொருளை விநியோகம் செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு கடத்த இருந்த 65 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 3,338 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

Post a Comment