பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.
சமாதானத்தை எட்டுவதுவதற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் முக்கிய அம்சமாகும். அதேவேளை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதை நிறைவு செய்வது நல்ல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாகும் எனவும் பிளேக் குறிப்பிட்டார்.
'கடந்தகால தவறுகளுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவது நல்லிணக்கத்தின் முக்கிய பகுதியாகும். அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வாக்குறுதிகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நாம் நம்புவதுடன் அதை எதிர்பார்க்கிறோம். நல்லிணக்கத்தின் கடைசி தூண் முன்னேற்றமடைந்த ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளாகும்' என பிளேக் தெரிவித்தார்.
"மாகாணங்களுடன் பரந்தளவிலான அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளல், 17ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல், மற்றும் மனித உரிமை, பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் போன்றவற்றுக்கான சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல், அத்துடன் ஊடகச் சுதந்திரத்திற்கு தேவையான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்தல் ஆகியன சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய படிகளாகும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றுகாலை ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷவை சந்தித்த ரொபர்ட் பிளேக், அதிகாரப் பகிர்வுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
அதேவேளை, "ஐ.நா.சபை செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தன்மையை பிழையாக புரிந்து கொண்டுள்ளனர். இக்குழு ஐ.நா.சபை செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அத்துடன் இலங்கையில் உள்ள ஆணைக்குழுவிற்கு உதவுவதற்குமே நியமிக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் என அமெரிக்கா நம்புவதாகவும், அத்துடன் இது ஒரு ஆலோசனை குழுவே தவிர, இக்குழு புலானாய்வு நடவடிக்கையில் ஈடுபடாது. இக்குழு இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிற்கு நன்மையளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மீளாய்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. செயன்முறைக்கும் ஐரோப்பிய யூனியனின் ஜி.எஸ்.பி. பிளஸ் செயன்முறைக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக கூறிய ரொபர்ட் பிளேக், அமெரிக்கா ஜி.எஸ்.பி. குறித்த மீளாய்வு நடைபெறும் நிலையில் இம்மீளாய்வு காலத்தில் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. சலுகை நீடிக்கும் எனத் தெரிவித்தார்.