சிறிலங்காவின் தென் பகுதியை அபிவிருத்தி செய்வதில் சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து வருகின்றன.

தென்பகுதியில் மாத்தள விமான நிலைய அபிவிருத்தி, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி, வீதிகள் புனரமைப்பு என்று சீனா கால் பதித்துள்ளது.
இந்தநிலையில், 290 மில்லியன் டொலர் கடனுதவியை சீனா வழங்கும் உடன்பாடு இந்த மாதத் தொடக்கத்தில் கைச்சாத்திடப்பட்டது.
கடந்த 3ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிதியமைச்சு செயலாளர் ஜெயசுந்தரவுக்கும் சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இந்தநிலையிலேயே இந்தியாவும் தென்பகுதி தொடருந்து சேவை அபிவிருத்திக்காக மேலதிக கடனுதவியை வழங்கியுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையிலான தெற்கு கரையோர தொடருந்து சேவை அபிவிருத்திக்கென இரண்டாவது கட்டமாக இந்தியா 67.4மில்லியன் டொலரை வழங்கவுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாகவே இந்தக் கடனுதவி வழங்கப்படவுள்ளது.
கொழும்பில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா முன்னிலையில் இதற்கான உடன்பாட்டில், சிறிலங்கா நிதியமமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவும், இந்தயாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரபாகர் தலாலும் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே முதற்கட்டமாக கொழும்பு – மாத்தறை தொடருந்து சேவை அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலரை இந்தியா வழங்கியிருந்தது.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் தெற்கு கரையோர தொடருந்து பயண வேகம் மணிக்கு 100 கி.மீற்றராக அதிகரிக்கப்படும்.
இதன்மூலம் காலிக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் இரண்டு மணிநேரமாக குறைக்கப்படும் என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது