கடந்தகாலப் போரில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

பன்நாட்டு பெண்கள் நாளான நேற்று முன்தினம் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்ததன் விளைவாகவே பன்நாட்டு பெண்கள் ஒன்று திரண்டு மனித உரிமை மீறலுக்கு எதிராக போராடினார்கள்.
இதன் விளைவாகவே மார்ச் 08ஆம் நாள் பன்னாட்டு பெண்கள் நாளாக அனுசரிக்கப்பபட்டு வருகின்றது. இலங்கையில் 52 வீதமானவர்கள் பெண்களாக இருந்தும் போதிய முன்னேற்றம் இல்லை. பெண்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளில் சிக்கி தலைநிமிர முடியாமல் உள்ளார்கள்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இன அழிப்பு போர் நடவடிக்கைகளில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் கணவன்மாரை இழந்தும் பிள்ளைகளை இழந்தும், உறவினர்களை இழந்தும், தனித்து விடப்பட்டுள்ளார்கள் – அங்கவீனர்களாகியுள்ளார்கள்.
இந்த நெருக்கடியான காலகட்டங்களில் பெண்களின் பாதிப்புக்களில் இருந்து பெண்களை மீட்டெடுப்பதற்கு தமிழ்ப்பெண்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் பத்மினி சிதம்பரநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்டப்டுள்ளது.