இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கடந்த மாதம் 24 ஆம் நாள் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் கொன்சேவேட்டிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் கலந்துகொண்டு உரையாற்றியது சிறீலங்காவில் நடைபெற்ற மோதல்கள் தொடர்பில் அந்த கட்சியில் ஏற்பட்ட கொள்கை மாற்றமாக கருதப்படுகின்றது.
ஈழத்தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட நிகழ்வு ஒன்றில் கொன்சவேட்டிவ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டது இதுவே முதல் தடவை என அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்கா தொடர்பில் கொன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகார கொள்கைகளை வடிவமைப்பதில் புலம்பெயர் தமிழ் சமூகம் எதிர்காலத்தில் காத்திரமான பங்குகளை வழங்க முடியும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தமிழர் பேரவையின் நிகழ்வுக்கு பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தலைவரும், அதன் நிழல் வெளிவிவகார அமைச்சரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதும் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகின்றது.
இதனிடையே பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொன்சேவேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால் சிறீலங்கா தொடர்பான வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிப்பதில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கிக் கொள்ளப்படும் என ஹெக் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.