
தென் அமெரிக்க நாடான சில்லியைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் காரணமான உருவான ஆழிப்பேரலைகள் ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து வரை பசுபிக் பெருங்கடலி்ல் உள்ள அனைத்து நாடுகளையும் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 3.34 மணிக்கு சிலியன் கடலோர நகரமான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் உருவான ஆழிப்பேரலைகள் (சுனாமி) சிலி, பெரு நாடுகளின் கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி, பசிபிக் கடற்பகுதியில் உள்ள ஹவாய், ஜப்பான், ரஷ்யா, ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து வரையுள்ள அனைத்து நாடுகளையும் அடுத்த 15 மணி நேரத்திற்குள் தாக்கும் என்று பசுபிக் சுனாமி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணித் துளிகளில் சிலி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளன. 9 அடி உயரமுள்ள ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடலோர நகர்பகுதியான மாலே கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதென கூறப்படுகிறது. அங்கிருந்தும், 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானிலும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
இதுவரை 82பேர் உயிரிழந்தாக மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சில்லி நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.