தெற்காசிய நாடுகளில் இராணுவப் புரட்சி என்பது சர்வ சாதாரண காட்சிகளாகப் போய்விட்ட நிலையில், அதற்கான நல்ல தருணத்தைத் தவறவிட்ட சரத் பொன்சேகா, சிறையிலிருந்து வெளியே வரும் சட்ட ரீதியான முயற்சியிலும் தோற்றுப்போயுள்ளார்.
பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி முஷ்ரப் போலல்லாவிட்டாலும், யுத்த வெற்றி மயக்கத்திலிருந்த மகிந்த சகோதரர்களை சுற்றி வழைத்துச் சிறைபடுத்தத் தயங்கியதால், தேர்தல் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றித் தன்னை அவமானப் படுத்திய ராஜபக்ஷ சகோதரர்களுக்கப் பாடம் படிப்பிக்க முடியாத சிறிலங்காவின் இராணுவத் தளபதி தற்போது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கடந்த காலங்களைக் கணக்கிட்டு வருகின்றார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற முகவரியுடன் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு யுத்தத்ததை, எந்தவித இரக்க சிந்தையும் இல்லாமல் தன் கணவன் நடாத்திய போரை ரசித்து மகிழ்ந்த அவரது துணைவியார் அனோமா பொன்சேகாவை இப்போதெல்லாம் கண்ணீர் இல்லாமல் பார்க்க முடிவதில்லை. எத்தனை ஆயிரம் தமிழ்ப் பெண்கள் மண் அள்ளித் திட்டிய சாபமோ, அனோமாவின் கண்ணீரும் இப்போதைக்கு அடங்கப் போவதில்லை என்றே தெரிகின்றது.
சரத் பொன்சேகா தமிழ் மக்களைப் போலவே, சிங்கள நீதியை நம்பி ஏமாந்து போய்விட்டார். சிங்கள நீதி மன்றம் ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டது என்பதை சில சிங்கள மக்களாவது புரிந்து கொள்ளும் காலம் உருவாகியுள்ளதும் ஆரோக்கியமானதே. இது காலம் கொடுத்த தண்டனையாகவோ, கடவுள் கொடுத்த தண்டனையாகவோ இருந்தால், மகிந்த சகோதரர்களுக்காகவும் காலம் அதிக நாட்கள் காத்திருக்காது என்று நம்புவோமாக.
சரத் பொன்சேகா இப்போதைக்கு வெளியே வரமாட்டார் என்பது உறுதியாகிப் போனாலும், எப்போதுமே வர முடியாமல் போனாலும் போகலாம் என்பதே பலரது ஊகமாகவும் உள்ளது. அடிபட்ட சிங்கத்தை ஆளும் சிங்கங்கள் வெளியே விட அனுமதிக்கப் போவதில்லை. மகிந்தவின் வாலை நறுக்கக் காத்திருக்கும் மேற்குலகிற்கு சரத் பொன்சேகா நைஜீரிய யூரேனியம் போல பெறுமதியானவர் என்பதை மகிந்த மட்டுமல்ல, இந்தியாவும் உணர்ந்தே உள்ளது. ஈழத்தில் நடைபெற்று முடிந்த மனிதப் பேரவலத்தினால் அதிர்ச்சியடைந்த மேற்குலகிடமிருந்து மகிந்த சகோதரர்களைக் காப்பாற்ற எந்தப் பழியையும் ஏற்கத் துணிந்த இந்தியா, தனது யுத்தத்தை முன்நின்று நடாத்தி முடித்த சரத் பொன்சேகா விடயத்திலும் மகிந்த சகோதரர்களைக் காப்பாற்றவேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளது.
சர்வதேசங்களின் முன்னால் சரத் பேச முற்பட்டால், காந்தி தேசமும் கவிழ்ந்து நிற்கவேண்டும் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். சரத் பொன்சேகா தரை தட்டிய கப்பல். அது மகிந்த சகோதரர்களுக்குப் பயன்படாமல் போனது போலவே இந்திய ஆட்சியாளர்களுக்கம் அவர் பயன்படாதவராகவே போய்விட்டார்.
சிங்கள தேசம் சரத் பொன்சேகாவின் சிங்கள நேர்மையால் அந்தத் தடவை இராணுவ ஆட்சியைத் தவிர்த்துக் கொண்டாலும், தமிழ்த் தேசியத்திற்கு எதிராக ஊதிப் பெருக வைத்துள்ள இராணுவக் கட்டமைப்பினால் மிகப் பெரிய அச்சுறுத்தல்களையும் அழிவுகளையும் எதிர் கொள்ளவே போகின்றது. ஆட்சியாளர்கள் தங்களைப் பலிக்கடாக்களாக்கி, எப்படியெல்லாம் வளம் பெற்றுவிடுகிறார்கள் என்பதை ஒரு தொகையான படையினர் உணர்ந்தே இருப்பார்கள். சிங்கள ஆட்சியாளர்களால் இன்னும் பல வருடங்களுக்கு படைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
ஈழத் தமிழர்களது படைச் சமவலு அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகள் எப்போது வேண்டுமானாலும் பாயக்கூடும் என்ற அச்சத்தில் உள்ள சிங்கள ஆட்சியாளர்கள் ஒவ்வொரு பத்துத் தமிழனுக்கும் பின்னால் ஒரு படையினனை வைத்திருக்க வேண்டிய கட்டாய நிலமை இப்போது அகன்றுவிடப் போவதில்லை. சிறிலங்காவின் பொருளாதாரம் இந்த இராணுவப் பூதத்தை வெகு காலத்திற்குத் தலையில் சுமந்துகொண்டிருக்கவும் முடியாது. இந்த இராணுவப் பெருக்கமே சிங்கள தேசத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிடும். அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் எழக்கூடிய அதிருப்தி அலையும், போராட்டங்களும் சிங்கள அரசை ஆட்டிப் படைக்க, இராணுவத் தலைமை ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஒவ்வொரு ஆட்சியாளரும் தனது நம்பிக்கைக்குரிய படைத் தலைமைகளைப் புதிதாக ஏற்படுத்திக் கொண்டலும், ஆட்சி மாற்றமொன்று நிகழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தில் கூட இராணுவத் தலைமை ஆட்சியைக் கைப்பற்ற முனைலாம். இது எல்லாமே வரத் வழங்கிய பாடங்கள்தான். பாக்கிஸ்தான், மியான்மார் பாதையில் சிங்களம் பயணிக்காது என்று நம்ப முடியாது. அவர்களுக்கு சரத் பொன்சேகா பாடமாக அமைவார்.