வியாழன், ஜூலை 2, 2009 11:49 | செய்தியாளர் கயல்விழி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பம் எதுவும் இல்லை – கிசோர்
தமிழ்த் தேசியக் கூட்டப்பிற்குள் எந்தவித பிளவோ, அன்றி குழப்பமோ இல்லை என, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசுடன் இணைய இருப்பதாகவும், இது பற்றி கூட்டமைப்பின் தலைமை அவரிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், கொழும்பின் அரச ஊடகங்களும், ஏனைய தனியார் ஊடகங்களும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இது பற்றி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோரை லண்டன் ஐ.பி.சி தமிழ் வானொலி தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் அதனை மறுத்திருக்கின்றார்.
இதேவேளை, இந்தப் பிரச்சினை தொடர்பாக கட்சியின் தலைமை விளக்கம் கேட்டிருப்பதாக, கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி பற்றிக் கேட்டபோதும், அவர் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என மறுத்துள்ளார்.
ஆனால் “வடக்கின் வசந்தம்” என்ற அரசின் திட்டத்திற்கு ஆதரவளித்துச் செயற்படுவதன் மூலம் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்கிளிற்கு உதவி செய்ய முடியும் என்தால், அந்த திட்டத்தை ஆதரித்து மட்டும் கருத்து வெளியிட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ் மாநகராட்சி, வவுனியா நகராட்சித் தேர்தல்களில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் எனவும், இக்கட்டான காலத்தில் தேவையற்ற தேர்தலை அரசு நடத்தினாலும், அதில் போட்டியிட வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.