புதன், ஜூலை 1, 2009 13:18 | செய்தியாளர் கயல்விழி
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை – அவுஸ்திரேலியப் பிரதமர்
இலங்கையில் நிலவி வரும் நிச்சயம் அற்ற நிலையும், தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையுமே, தமது நாட்டில் அவர்கள் தஞ்சம் கோருவதற்கான காரணம் என, அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் றுட் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற தன்மையால் தமது நாட்டில் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவுஸ்ரேலிய கடற்படை மற்றும் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு திணைக்கள காரியாலயம் என்பன, இவ்வாறு அதிகரித்த புகலிடக் கோரிக்கையை கையாள தயாராக உள்ளதாகவும், தாம் 10,000 வரையான புகலிட விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போர் முற்றாக முடிவடைந்து விட்டதாகவும், தற்போது நாடு ஒற்றுமைப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா அரசு பரப்புரை மேற்கொண்டுவரும் நிலையில், மற்றொரு நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவிற்குச் செல்ல வேண்டாம் என, அமெரிக்க அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட பயண எச்சரிக்கை, சிறீலங்கா அரசை கோபமடையச் செய்தது போன்று அவுஸ்திரேலியாவின் இந்தக் கருத்துக்கும் கண்டனம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் என சந்தேகக்கப்படும் 194 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் கால் பதிக்க முன்னர் கைது செய்யப்பட்ட அனைவரும், வழமைபோன்று கிறிஸ்மஸ் தீவுக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தஞ்சம் கோரும் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடுமையான விசாரணைகள் இடம்பெறுவதாக, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.