திவிநெகும சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வடகிழக்கில் தமிழ் பேசும் மக்களின் அதிகாரப் பரவலாக்கலுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபையின் வலுவற்ற அதிகாரங்கள் கூட குறைக்கப்படுவதற்கே கிழக்கு மாகாண சபை துணைபோயுள்ளது.
இவ்வாறு அதிகாரம் இல்லாத மாகாண சபைகள் தமிழ் பேசும் மக்களுக்கு தவையில்லை. அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக "திவிநெகும' சட்ட மூலத்திற்கு தலையாட்டிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.
தாம் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்தது பிழை என தெரிய வரும் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள "திவிநெகும' சட்ட மூலம் பற்றி கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருக்கின்றது என்பதற்காக இச்சட்ட மூலத்தை எதிர்க்கவில்லை. இதன் பாதகங்களை எமது சட்ட நிபுணத்துவக் குழு நன்கு ஆராய்ந்த பின்னரே "திவிநெகும' சட்ட மூலத்தை எதிர்க்கின்றோம். மாகாண சபைகளுக்கு இருக்கின்ற கொஞ்ச நெஞ்ச அதிகாரங்களையும் இச்சட்ட மூலம் பறித்தெடுத்துள்ளது.
அதுவும் இங்கிருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்கள் நேரடியாக மத்திய அரசாங்கத்திற்குப் போகவில்லை. அதன் கீழுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குத்தான் செல்கின்றது. இதன் மூலம் மாகாண சபையினால் செய்ய வேண்டிய சில விடயங்கள் கூட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுமதியைப் பெற்றே செய்ய வேண்டியுள்ளது.
சமுர்த்தி அதிகார சபையை திணைக்களமாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவில்லை. அந்த ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு ஏனைய விடயங்களை மூடி மறைக்கின்ற கபடத்தனமான சட்டமூலத்தையே எதிர்க்கின்றோம்.
ஏற்கனவே, அதிகாரம் இல்லாத கிழக்கு மாகாண சபையில் இருந்த அதிகாரமும் பறிபோயுள்ளது. இதற்கு அரசோடு இணைந்து துணை போயுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதன் தாற்பரியத்தை உணர்ந்து கொள்ளும் போது காலம் கடந்திருக்கும். அப்போது தமக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு என்ன பதில் கூறப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்றார்.