தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி என்ற இடத்தில் ஒரு பட்டாசு ஆலையில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தார்கள். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஓம் சக்தி பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று நண்பகல் திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென பல்வேறு அறைகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் வைக்கப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன.
அருகில் உள்ள கிராம மக்கள், அங்கு ஓடிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட முயன்றபோது மிகுந்த தீவிரத்துடன் தீ எரியத்துவங்கியதால் மேலும் வெடிமருந்துகள் வெடித்ததன. இதையடுத்து, ஆலையின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தீயின் உக்கிரம் கடுமையாக இருந்ததால், தீயணைப்புப் படையினர் கூட உடனடியாக அந்த இடத்தை நெருங்க முடியவில்லை. தீயின் காரணமாக புகை மூட்டமும் பெரிய அளவில் ஏற்பட்டது. அதனால் பல தொழிலாளர்கள் அந்தக் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டார்கள்.
சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று 250க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சுமார் 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில், ஒரு அறையில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அருகில் உள்ள அறைகளில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறியது.
அப்போது, வேலை செய்து கொண்டிருந்த 40 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதால், தற்போது பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
காயம் அடைந்த பலருக்கு 80 சதவீதற்கு மேல் தீக் காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. படம் பிடிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவரும் விபத்தில் சிக்கிக் கொண்டார்.
இதில் வேதனை என்னவென்றால், பட்டாசு விபத்தை வேடிக்கை பார்க்க சென்ற பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வெடித்ததில் அதன் மூலப்பொருள் பரவியதால் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தது. 100 அடி உயரத்திற்கு மேல் புகை சூழ்ந்துள்ளதால் தீயை அணைக்க வீரர்கள் போராடினர். ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது.
விபத்து நடந்து இடத்துக்கு மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும் சம்பவ இடத்துக்கு அமைச்சர் விரைந்துள்ளார். 