வௌ்ளவத்தை இராமகிருஷ்ணா வீதியிலுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மீட்கப்பட்ட சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டதுடன், அந்த குடும்பத்தைச் சேர்ந்த புதல்வர் ஒருவர் காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வௌ்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வீட்டின் கீழ்மாடியிலிருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
சடலமாக மீட்கப்பட்ட தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் கொட்டகலை பகுதியிலிருந்து கடந்த 16ஆம் திகதி வௌ்ளவத்தைக்கு வந்திருந்தனர்.
தமது மகனுடன் முன்னேஸ்வரம் கோவிலுக்கு செல்வதாக கூறி இவர்கள் கொட்டகலை வீட்டிலிருந்து புறப்பட்டதாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மகன் பிரகாஷ் குமாரசாமி கொட்டகலை டெலிகிளார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு கடந்த 16ஆம் திகதி வந்து சென்றதாக தோட்ட மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பத்தனை பொலிஸார் இந்தக் குறிப்பிட்டத் தோட்டத்திற்கு 18ஆம் திகதி நேற்று சென்று உயிரிழந்தவர்களின் வீட்டினை அவதானித்த போது வீட்டின் முன்கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அத்துடன் அந்தக்கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டினுள் சென்ற பொலிஸார் வீட்டினுள்ள அறையொன்றில் இருந்த அலுமாரி உடைக்கப்பட்ட அதனுள்ளிருந்த பொருட்கள் சிதறப்பட்ட நிலையில் இருந்துள்ளதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தை தேயிலை தோட்டமொன்றின் சாரதியாக கடமையாற்றியுள்ளதுடன், அவர் அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார். ஓய்வுபெற்றதன் பின்னர் வழங்கப்பட்ட கொடுப்பனவு பணமும் அவரிடமிருந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்துள்ள 58 வயதான பெண் தோட்ட தொழிலாளி என்பதுடன், 23 வயதுடைய அவர்களது மகள் பயிற்சிபெறும் எழுதுவிளைஞராகவும் தொழில்புரிந்துள்ளார்.
அவர்களது சொந்த வீட்டை திம்புள்ள பொலிஸார் நேற்று காலை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், வீட்டிலுள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறி காணப்பட்டுள்ளன.
இந்த மூன்று மர்ம மரணங்கள் தொடர்பிலும், அவர்களது புதல்வருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் வெளிவரவில்லை.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.