வரட்சியின் காரணத்தினால் கிளிநொச்சி இரணமடுக்குளம் வற்றியுள்ளது. இதனால் நெல் செய்கைக்கான நீர் விநியோகம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில் குளத்தின் ஆழ்பகுதி நீரை விவசாயச் செய்கைக்கென வழங்குவதற்கான முயற்சியில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குளத்தின் வயிற்றுப் பகுதியில் இருந்து வரும் தாய் வாய்க்காலைத் தூர் வாரி அகழ்ந்த நீரை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் விகிர்தன் விகர்தன் கருணானந்தராஜா மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் விவசாயிகள் எனப் பலரும் ஈடுபட்டுள்ளனர்.
உழவு இயந்திரங்களின் உதவியுடன் வாய்க்காலைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டமிட்டதற்கு மேலதிகமாக மேலும் 20 நாட்களுக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டியேற்பட்டதால் இவ்வாறு வாய்க்காலைச் சீர்ப்படுத்தி நீரைப் பெறவேண்டியுள்ளது என பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இரணமடுத்திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கையில் 90 வீதமானவை அறுவடையை நெருங்கியுள்ளன. ஆயினும் மீதமுள்ள பயிர்களுக்கான நீர் விநியோகம் அவசியமாக உள்ளதாக எஸ்.சதாகரன் மேலும் தெரிவித்தார்.