அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது.
இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர்.
இவ்வேளை இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்த விகாரைக்கு கொண்டு செல்ல ஒரு பௌத்த பிக்கு நடவடிக்கை எடுத்த போது தடுக்குமாறு இந்து குடும்பங்கள் முறையிட்டனர்.
இவ்வேளை இப்பௌத்த பிக்கு தொடர்ச்சியாக இந்து மக்களுக்கும் ஆலயத்தினருக்கும் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்பகுதி மக்கள் விநாயகர் விக்கிரகத்தை பாதுகாக்க முயற்சித்த வேளையிலும் இன்று பௌத்த பிக்கு சிங்கள காடையர்களுடனும் ஊர்காவல் படையினருடனும் வந்து இந்து மக்களை தாக்கி இந்துக்களின் பிள்ளையார் விக்கிரகத்தை ஆலயத்துள் புகுந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்கும் வகையில் நடாத்தப்படும் செயற்றிட்டங்களை சுட்டிக்காட்டி இந்துக்களின் மத உரிமையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மதவிவகார அமைச்சரும் பிரதமருமான தி.மு. ஜயரத்னவை அவசரமாக சந்திப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.