இன்று பதினைந்தாவது நாளாகத் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ள திரு. சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுநாளாகிய இம்மாதம் பன்னிரண்டாம் திகதிவரை உறுதியாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். தன்னை சந்தித்து வரும் பல இளையவர்கள் தனது போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதுடன், புலம்பெயர் நாடுகளில் இது போன்ற கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி தன்னுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்ட அவர் மின்னஞ்சல் மூலமாக ஆதரவினை வழங்கி வரும் தமிழக உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.
திரு. சிவந்தன் பெரும்பாலான நேரத்தில் படுக்கையில் சோர்வாகக் காணப்படுகிறார். இது தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் இந்து குமரேந்திரனினடம் விசாரித்தபோது, அவரது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும், அது தவிர அவரது உடல்நிலை சுமூகமாகவுள்ளதாக கருத்துவெளியிட்டார்.
கடந்த பதினான்கு நாட்களும் கடைப்பிடிததுபோல் இன்றைய தினமும காலை 9 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியும், பிரித்தானியக் கொடியும் ஏற்றப்பட்டு இரவு 8 மணிக்கு அவை இறக்கப்பட்டன.
ஓலிம்பிக் போட்டிகளுக்காக லண்டன் போக்குவரத்து மிகச்சீரானதாக அமைந்துள்ளதால், மக்கள் பொதுப்போக்குவரத்தினை பாவித்து திரு. சிவந்தன் தங்கியிருக்கும் ஸ்ரற்போர்ட் பிரதான வீதியில் உள்ள இலகு தொடருந்து நிலையத்துக்கு (Stratford High Street DLR) வரமுடியும்.