
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநருக்கும் பயணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதையடுத்து குறித்த பயணி பேருந்தின் சில்லிடையே சிக்கி மரணமடைந்துள்ளார்.
யாழ். மடத்தடி சந்திக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிளிநொச்சி ஜெயபுரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய திருநாவுக்கரசு கண்ணன் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றிரவு 9 மணிக்கு கொழும்பு நோக்கி வந்த பஸ்சில் குறித்த பயணி ஏறியுள்ளார். இதனையடுத்து டிக்கற்; தொடர்பில் நடத்துநருக்கும் குறித்த பயணிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது பேருந்திலிருந்து கீழிறங்கி பேருந்தின் பின்னால் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது குறித்த பேருந்தின் சாரதி பேருந்தை பின்னால் செலுத்திய போது பேருந்தின் சில்லிடையே பயணி சிக்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பயணி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.