புனேயில் தியேட்டர், ஓட்டல் உள்பட 5 இடங்களில் நேற்று இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதிய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயை எதிர்பார்த்து இந்த நாசவேலை நடத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சராக நேற்று பதவியேற்ற சுஷில் குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஜங்லி மகாராஜ் சாலையில் தியேட்டரில் உள்ள அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற இருந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார்.
கடைசி நிமிடத்தில் அதை அவர் ரத்து செய்தார். இந்நிலையில், மாலை 7.28 மணிக்கு இந்த சாலையில் உள்ள 5 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. 7.35க்குள் இந்த குண்டுகள் வெடித்தன. பால்கந்தர்வா தியேட்டரின் வெளியே உள்ள சிலை, வங்கி, மெக்டெனால்டு கடை, பஸ் நிலையம் எதிரே உட்பட 5 இடங்களில் வெடித்த இந்த குண்டுகள், மிகவும் சக்தி குறைந்தவையாக இருந்தன. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஒருவர் மட்டுமே காயமடைந்தார். உயிர் இழப்பு எதுவுமில்லை. மகாராஜ் சாலையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடைகள், ஒட்டல்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், மக்களிடையே பீதியை உண்டாக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எந்த ரகத்தை சேர்ந்தவை என்று தெரியவில்லை. குண்டு வெடித்த இடங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிக்காமல் இருந்த 6வது வெடிகுண்டு செயல் இழக்க செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இது தீவிரவாதிகளின் செயலா அல்லது சமூக விரோதிகளின் கைவரிசையா என தெரியவில்லை. புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் கடந்த 2007, பிப்ரவரியில் பயங்கர வெடிகுண்டு வெடித்து 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.