
யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை துணிகர கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணம் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் - மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர்களது மகன் சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தகப்பனார் வெளியில் சென்றசமயம் வீட்டு வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைகளைப் பின்னால் இறுக்கிப் பிடித்தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரதுமகனின் கடவுச்சீட்டை அச்சுறுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச் சீட்டைக் கிழித்து எறிந்து விடுவோம் என மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உரையாடியதாக காவல்துறை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.