Jul 30, 2012
25 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பிய கனேடியத்தமிழர் சிறிலங்கா தீவிரவாத முறியடிப்புப் பிரிவினரால் கைது
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிய கனேடியத் தமிழர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத முறியடிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடராசா ஜெயகாந்தன் என்ற 53 வயதான தமிழரே வடமராட்சி வதிரிப் பகுதியில் வைத்து சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு, வான் ஒன்றில் சென்ற நால்வர் ஜெயகாந்தனை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கனேடியத் தமிழரான ஜெயகாந்தனை தீவிரவாத முறியடிப்புப் பிரிவினர் கைது செய்து விசாரித்து வருவதாகவும், அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண கூறியுள்ளார்.
தனது சகோதரரின் மகனின் திருமணத்துக்காக மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஜெயகாந்தன் கனடாவில் இருந்து ஊர் திரும்பியிருந்தார்.
கடந்த ஒரு மாதமாக இவர் வதிரியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே, சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இவரது கைதுக்கான காரணம் எதையும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் வெளியிடவில்லை.