தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உட்பட எண்மர் நேற்று வியாழக்கிழமை இரவு நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிவாஜிலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஜூலை 25 படுகொலைகளை நினைவுகூரும் வகையிலும் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கதுரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும் சுவரொட்டிகளை நேற்று வியாழக்கிழமை இரவு ஒட்டிக்கொண்டிருந்தபோதே படையினராலும் பொலிஸாரினாலும் அச்சுறுத்தப்பட்டு நாம் கைது செய்யப்பட்டோம் - என்றார். யாழ். குடாநாடு முழுவதும் வெலிக்கடை படுகொலைகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டியபோதிலும் நெல்லியடியிலேயே எம்மைக் கைது செய்துள்ளனர் என அவர் மேலும் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது சகாக்கள் எட்டுப் பேரும் விசாரணைக்காகவே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களைக் கைது செய்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார்.