சிறிலங்கா படைஅதிகாரிகளுக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும், மேலும் பல சிறிலங்கா படை அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னையில் வந்திறங்கிய நான்கு சிறிலங்கா படை அதிகாரிகள் பின்னர், கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் கொல்கத்தாவில் ஏ.என்-32 விமான இயந்திரம் பொருத்தும் பயிற்சியைப் பெறவுள்ளனர்.
கொல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இவர்களுக்கு நான்கு மாதகாலப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
நவம்பர் 23ம் நாள் வரை இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
புரொபுல் சியொன் (வயது 33 ), ஜெகத் சந்திரகுமார (வயது 25 ), சரத் சமீர (வயது 33), பின்ன கொடகே நிலந்த (வயது 28) ஆகிய சிறிலங்கா படை அதிகாரிகளே பயிற்சிக்காக கொல்கத்தா வந்துள்ளனர்.
சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமான தளம் மற்றும் வெலிங்டன் இராணுவப் பயிற்சி நிலையம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து இந்த இரு இடங்களிலும் பயிற்சி பெற்று வந்த சிறிலங்கா படை அதிகாரிகள் வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்குச் சவால் விடும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நான்கு படை அதிகாரிகளை சென்னை விமான நிலையம் ஊடாக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.