அவுஸ்ரேலியாவுக்கு ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் சிறிலங்கா கடற்படை தோல்வியடைந்துள்ளதாக சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் முடி, சிறிலங்கா கடற்படைத் தளபதியை சந்தித்து குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த புதன்கிழமை சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற அவசரசந்திப்பு ஒன்றிலேயே, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவிடம், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன் படகுகளில் அகதிகள் அவுஸ்ரேலியா செல்வதை சிறிலங்கா கடற்படை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில், தமது நடவடிக்கைக்கு அவுஸ்ரேலியா ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி குற்றம்சாட்டியுள்ளார்.
“2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்களை ஏற்றிச் சென்ற இழுவைப்படகுகளை தடுத்து வைத்துள்ளோம்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 400 பேர் தடுக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படைப் புலனாய்வுப் பிரிவும், அதன் சகோதர புலனாய்வு அமைப்புகளும் ஆட்கடத்தல்களை முறியடிக்க மேலதிகமாக பணியாற்றுகின்றன.
ஆனால் துரதிஸ்டவசமாக, எமது முயற்சிகளுக்கு அவுஸ்ரேலியா ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
நிலைமைகளை அவுஸ்ரேலிய தூதுவருக்கு விளக்கியுள்ளேன்.
சிறிலங்கா கடற்படைக்கு பின்னால் அவுஸ்ரேலியா இருக்கத் தவறியுள்ளது.
பொருளாதார அகதிகளைக் கவரும் முதன்மையான தெரிவாக அவுஸ்ரேலியா இன்னமும் இருந்தது வருகிறது. அவர்களின் சட்டங்கள் அதற்கு இடமளிக்கின்றன.
ஒரு படகில் சென்ற பொய்யான அகதிகளை அவுஸ்ரேலியா திருப்பி அனுப்புமேயானால் ஒரே இரவில் நிலைமைகள் மாறும்.
எமது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ அடைக்கலம் தேடியவர்களின் விபரங்களைத் தரவோ அவுஸ்ரேலியா தயாராக இல்லை.
தமது காவலில் உள்ள சிறிலங்கா படகுகளின் விபரங்களையும் வெளியிட மறுக்கிறது. சிறிலங்காவுக்கு அப்பால் 200 கடல்மைல் தொலைவில் இழுவைப்படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருப்பதாக அண்மையில் அவுஸ்ரேலியத் தூதுவர் எனக்குத் தகவல் தந்தார்.
அதனை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிய அவர், சரியான இடத்தை கூறவில்லை.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.