அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன்அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகள் குறித்த வருடாந்த அறிக்கையில் இலங்கைகுறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் மோசமான மனித உரிமை பிரச்சினைகளாக, அரசாங்கப் படைகளாலும், துணைப்படைகளாலும் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்கு விரோதமான கொலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நடக்கும் இப்படியான கொலைகள், அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று பார்க்கப்படுபவர்களும், செய்தியாளர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களால் இலக்கு வைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அரசாங்கத்தில் நிறைந்திருப்பதாகவும் அமெரிக்க அரசுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையில் நடந்த தேர்தல் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அரசுத்துறை, காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பில் எந்த வகையிலான பொறுப்புக்கூறலுக்கும் அங்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டி அங்கு நடமாடுவதற்கான மக்களின் சுதந்திரமும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அது கூறியுள்ளது.
மனித உரிமை துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மிகவும் சொற்ப அளவிலான அதிகாரிகளையே அரசாங்கம் தண்டித்துள்ளதாகவும் அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது.