மனிதன் தோன்றிய காலம் முதற்கொண்டே பல்வேறு கொடுமைகளை அனுபவித்தே வாழ்கின்றான். அதிலும் பெண்களுக்கு கொடுமைகளும் வன்முறைகளும் அவள் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகின்றன. கருவில் இருப்பது பெண்தான் என்று தெரிந்துவிட்டால் அக்கரு கலைக்கப்படுகிறது. குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால் அக்குழந்தை கொலைசெய்யப்படுகிறது.
இன்னிலை முற்றிலும் மாறும் காலம் எக்காலம்?
பெண்களை பாதுகாக்கும் அமைப்புகளும் சட்டங்களும் எண்ணிலடங்கா இருந்தபோதிலும்
ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் ஏதேனும் முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப் பட்டும்தான் இருக்கின்றார்கள்.
தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பெண் ஏதேனும் ஒருவகையில் தனக்கெதிரான வன்முறைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறாள். மேலும், ஆய்வுகளின்படி 70சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஆண்களினால் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்முறைகளை அனுபவிக்கின்றனர்.
பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் இடங்களில் வெளிப்படுகின்றன. வீட்டில், பள்ளிக்கூடங்களில், அலுவலகங்களில், பொது இடங்களில் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நாளுக்கு நாள் அவை வேறுபடுவதையும் குறிப்பிடல் வேண்டும். கற்பழித்தல், பலவந்தப்படுத்துதல், துன்புறுத்துதல், பாலியல் தொல்லைகளுக்கு உந்தப்படுத்துதல், பெண் உறுப்பை சிதைத்தல், கடத்தல், தரக்குறைவாக நடத்துதல், முறையற்ற உடல் உறவுக்கு கட்டாயப் படுத்துதல் இவ்வாறாக பல வடிவங்களில் இன்று உலகெங்கினும் உள்ள பெண்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறிருப்பினும், ஆய்வுகளின் வழி கண்டறியப்பட்ட கொடுமை; ஒவ்வொரு 29நிமிடத்திற்கும் கற்பழிப்புகள் நடக்கவே செய்கிறது என்பதேயாகும்.
உடலைக் காயப்படுத்துவதும் அடிப்பதும் உதைப்பதும் மட்டுமே பெண்களுக்கெதிரான வன்முறையென்றாகாது. தாகாதச் சொற்களை அவர்களிடம் பயன்படுத்துவதும், பெண் உணர்வுகளை மதிக்கத் தவறுவதும்கூட இதில் அடங்கும்.
'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று வரும்போது உலகில் நாகரீகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை' என்று ஐக்கிய நாடுகள் சபையின் கோபி அனான் குறிப்பிட்டிருப்பதை இச்சமயத்தில் நினைவுப்படுத்துதல் பொருத்தமே.
எல்லா சமூகத்திலும் பெண் உடல், உள மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறிய அளவிலேனும் உள்ளாக்கப்படுகிறாள். இதனை வெளியுலகிற்குக் காட்டி அதற்கான முடிவுகளை எடுப்பதற்காகவே உலக மகளிர் தினம் முன்வைக்கப்பட்டது. இத்தினம் மார்ச் 8ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிலையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு நாளிலேனும் பெண்களை போற்றி அவர்கள் உணர்வுகளை மதிப்போமாக.
பெண்களும் எல்லா உணர்வுகளும் கொண்ட மனித பிறவிகளே என்று உணர்க!!