வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை 611 வது படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவத்தினரின் பெயருக்கு எழுதி வழங்கிய வவுனியா பிரதேச செயலர் சிவபாதசுந்தரம், காணி உத்தியோகத்தர் வசந்தன் ஆகியோருக்கு படைப்பிரிவின் அதிகாரி மனம் நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்திருக்கின்றார்.ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக்காணியில் உள்ள மாவீர்களின் நினைவுத்தூபிகள், கல்லறைகள் என்பன இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு இடிபாடுகள் காணியின் எல்லைப்பகுதிகளின் அரண்களாக குவிக்கப்பட்டுள்ளன.

துயிலும் இல்லக்காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்துவருவதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் காணியினை தமக்கு உரித்தானதாக்க இராணுவத்தினர் முடிவுசெய்திருந்த நிலையில் வவுனியா பிரதேச செயலர் சிவபாலசுந்தரமும், காணி உத்தியோகத்தர் வசந்தனும் தாமாகவே முன்வந்து குறித்த காணியினை இராணுவத்தினருக்குச் சொந்தமானது என்று காணி உரிமைப்பத்திரம் வழங்கியிருக்கின்றனர்.
குறித்த காணியில் 611 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் திறப்பு நிகழ்வின் போது உரையாற்றிய படைத்துறையின் அதிகாரி குறித்த நபர்களின் பணியினை மனந்திறந்து பாராட்டியதாக தெரியவருகின்றது.
வவுனியாவில் நடைபெறும் சட்டவிரோ மண் அகழ்வு, மரக்கடத்தல், காணி அபகரிப்பு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பிரதேச செயலரும் காணி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை அவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் பல அந்நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன