சிறிலங்காவில் தெரிவு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்படும் பாடசாலைகளில் கடமையாற்ற வேண்டும். இல்லையேல் அவர்களுக்கான நியமனம் இரத்துச் செய்யப்படுமென சிறிலங்கா கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
தெரிவு செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்ப பட்டதாரிகள் கடமையாற்ற வேண்டிய பாடசாலையினை கல்வியமைச்சே முழுமையாக தீர்மானிக்கிறதே தவிர இதில் பட்டதாரிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம் வழங்கப்பட வில்லை எனவும் அமைச்சர் பந்துல கூறினார்.
ஆசிரிய நியமனம் பெறுவோர் அவர்களது மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் சேவையாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கப்படும் விதத்திலேயே ஒழுங்கு விதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் இல்லாத நிலையில் அதற்கு அண்மித்த இன்னுமொரு பிரதேசத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்டதாரி ஒருவர் அப்பாடசாலைக்குரிய ஆசிரியராக நியமிக்கப்படுவார். இது போன்று வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதி லுமுள்ள ஆயிரம் பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்ப பட்டதாரிகள் நியமிக்கப்படுவர்.
இந்நிலையில் கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்படும் பாடசாலையில் கடமையாற்ற விரும்பாத பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்துச் செய்யப்படுமென்பதில் கல்வி அமைச்சு உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலதிகமாக ஆயிரம் கணித ஆசிரியர்கள், ஆயிரம் விஞ்ஞான ஆசிரியர்கள் மற்றும் ஆயிரம் ஆங்கில ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.