தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இலக்கிய வரலாற்றில் காட்டூன் ஓவியக் கலையில் பிரித்துப்பார்க்க முடியாத ஒருவராகி விளங்கி மறைந்த ஓவியர் பயஸ் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு “பயஸ் காலக்கிறுக்கல்கள்” நூல் வெளியீட்டு விழாவும் ஊடக சுதந்திரநிகழ்வும் யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளன.

யாழ். திருமறைக்கலாமன்ற மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்விற்கான ஏற்பாட்டினை நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பு மேற்கொண்டிருந்தது.
அமைப்பின் தலைவர் ஆர்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

‘பயஸ் காலக்கிறுக்கல்கள்’ நூலினை ஓவியர் பயஸ்ராஜாவின் துணைவியார் திருமதி காயத்திரி பயஸ்ராஜா, மகன் ஜதிவர்மன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். வெளியீட்டு உரையினை யாழ். தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளருமான ஆ.சபேஸ்வரனும் ஆற்றினர்.

சம காலப்போக்கினில் தமிழ் ஊடகங்கள் எனும் தலைப்பினில் வீரகேசரி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் எ.தேவராஜூம் நாலாவது தூண் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு.குருபரனும், சமூக ஊடகங்கள் எனும் தலைப்பில் ஊடகத்துறை விரிவுரையாளர் அருட்திரு ம.றூபன் மரியாம்பிள்ளை அடிகளாரும் உரையாற்றினர்.

நிகழ்விற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஸ்பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவஞானம் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், என்.கே.சிவாஜிலிங்கம் உட்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்னார்.

இந்த நிகழ்வின் போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பத்துப்பேருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்ட அதேவேளை ஓவியர் பயஸ்ராஜாவின் மகன் ஜதிவர்மனின் உயர்தரம் வரையான கல்விச் செயற்பாடுகளுக்கான நிதி உதவியினை தாம் பொறுப்பேற்பதாக நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் தலைவர் ஆர்.தயாபரன் வாக்குறுதி வழங்கினார்.









