இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் விபரம் வருமாறு
‘போருக்கு பின்னரான காலகட்டத்திலும் ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட, காணாமல்போன, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
ஊடக நிறுவனங்கள், ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள பிணையில் விடுதலை செய்யப்படுவதும் விசாரணைகளை இழுத்தடிப்பதும் இலங்கையில் வழமையாகி வருகின்றது.
ஊடகவியலாளர்களுக்கான தொழில் பாதுகாப்புகள் உரிய முறையில் இல்லை. மிரட்டல், ஊடகவியலாளர்களை பின்தொடர்தல் போன்ற எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
ஆகவே ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசும் இலங்கை அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி, விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் அதற்கான உறுதிமொழிகளை வழங்கி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஊடக தொழிலை மேற்கொள்வதற்கான கருவிகள் மற்றும் வசதி வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.