ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிக்கான நடை பயணம் மேற்கொண்டுள்ள மூவரும், இன்று (07-02-2012) 3வது நாளாக வெட்டவெளிப் பிரதேசங்கள் ஊடாக கடும் குளிர் மற்றும் எதிர்காற்றுக்கு மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ள பின்புலத்தில், தமிழீழ மக்களின் விடிவுக்காக, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள், மக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இந்த உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை நல்கி வருகின்றனர்.

இவர்கள் மூவரும் கடும் சிரமத்தின் மத்தியிலும், மனம் தளராது உறுதிநடை மேற்கொள்ளும் ஏக காலத்தில் அனைத்துலக போர்க்குற்ற விசாணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி தாங்கிய அஞ்சல் அட்டைகள் ஊடகவும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் தமிழீழ உணர்வாளர்களால் வழிப்புணர்வுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஈழத்தமிழ் மக்களின் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நீதிக்கான நடை பயணத்தின் நோக்கத்தையும், தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இன அழிப்பு, அதன்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதன் மூலமே வெளிநாடுகளின் ஆதரவையும், வெளிநாட்டு மக்களின் ஆதரவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும் என நடை பயணத்தை மேற்கொள்ளும் உறவுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, கடும் குளிர், மற்றும் காற்றின் மத்தியில் இடம்பெறும் நடைபெறும் நடை பயணம், மற்றும் அஞ்சல் வழிப் வழிப்புணர்வுப் போராட்டங்களிற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது ஆதரவைக் கொடுத்து, தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கம் மீதான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி, இன அழிப்பை அம்பலப்படுத்த துணை நிற்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புகுழு அலுவலகங்கள், அல்லது பிராந்தியப் பணியாளர்கள் ஊடாக இந்த அஞ்சல் அட்டைகளைப் பெற்று, தாம்வாழும் நாடுகளில் உள்ள வேற்று நாட்டு மக்களுக்கும் அவற்றைக் கொடுக்குமாறு நடை பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.
அஞ்சல் அட்டைகள், மற்றும் துண்டுப்பிரசுரங்களை
www.walk-for-justice.org என்ற இணையம் ஊடகாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை ஏற்ப்பாட்டாளர்கள் அறியத்தருகின்றார்கள்.