
ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் இயக்கி வரும் இரகசிய நிலக்கீழ் அணு ஆயுத உலைகளை அழிக்கவென அமெரிக்கா தயாரித்து வைத்துள்ள அதன் மிகப்பெரிய குண்டானது போதுமான சக்தி கொண்டதல்லவென பென்டகன் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இக் குண்டினை இன்னும் மேம்படுத்தும் பொருட்டு தமக்கு அனுமதியளிக்குமாறு அமெரிக்க அரசிடம் பென்டகன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலத்தின் கீழ் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட (Bunker Buster) குண்டுகளில் தற்போது அமெரிக்காவிடம் உள்ள அதி செயற்றிறன் வாய்ந்தவையே (Massive Ordnance Penetrator) குண்டுகளாகும். அவை 13.6 தொன் நிறை கொண்டவை.
குறிப்பாக ஈரான் மற்றும் வட கொரியாவின் இரகசிய இலக்குகளைத் தாக்குவதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்டவை.
இந்நிலையில் ஈரான் தனது அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளை அதி பாதுகாப்பான சுரங்கங்களில் மேற்கொண்டு வருவதாகவும், முன்னரை விட அவற்றின் பாதுக்காப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.
அவ்வாறதொரு நிலையிலேயே பென்டகன் இத்தகையதொரு வேண்டுகோளை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிகின்றது.
இதுவரை இத்தகைய குண்டுகள் 20 தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இக்குண்டுகளை மேம்படுத்துவதற்காக இன்னும் 82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியினை பென்டகன் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.