
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்தில் இன்று காலை ஒருவர் சடலமாக இருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. கல்லாற்றைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை, காத்தான்குடிச் சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
வழமை போன்று இன்று காலை 10.30மணியளவில் கொழும்பு மத்திய பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட குறித்த பேருந்து சுமார் 11.20 மணியளவில் ஒறுகொடவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்புவதற்கு நிறுத்தப்பட்ட வேளை, பயணிகள் பஸ்ஸின் பின்புறத்தில் பிரயாணி ஒருவர் மயக்க நிலையில் இருப்பதாக பேருந்து சாரதி மற்றும் நடத்துநரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துநர், ஒறுகொடவத்தைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பொலிஸாரின் உதவியுடன் அந்நபர் கொழும்பு அரச பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து, வைத்தியர்கள் குறித்த நபர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தினர் .
பெரிய கல்லாற்றைச் சேர்ந்த தம்பிராசா புவிராஜ் (வயது 50) என்பவரே இவ்வாறு சடலமாகக் காணப்பட்டார் என்றும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.