
ஈராக்கில் ஒரே நாளில் 34 பேர் தூக்கிலிடப்பட்டமைக்கு ஐ.நா. தனது கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 34 பேருக்கே கடந்த வியாழக்கிழமை இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இத்தனை பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை , இச் செய்தியைக் கேட்டவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 1200 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் எதனையும் ஈராக் அரசு இதுவரை வெளியிட ஆர்வம் காட்டவில்லை.
கடந்த வருடம் நவம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து இதுவரை சுமார் 63 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈராக்கில் சுமார் 48 வகையான குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் சொத்துக்குகளுக்கு சேதம் விளைவித்தலும் அடங்குகின்றது.
அங்கு நடைபெறும் நீதிமன்ற விசாரணைகளின் நம்பக்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பிலும் தமக்கு சந்தேகம் நிலவுவதாக ஐ.நா. தெரிவிக்கின்றது.
சதாம்ஹுசைனின் ஆட்சிக்காலப்பகுதியிலும் மரணதண்டனை அதிகமாக வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய ஆட்சியிலும் கூடக் கைதிகள் துன்புறுத்தப்படுதல், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் ஈராக்கில் அதிகமாக இடம்பெற்றுவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
மேலும் சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கி ஈராக் நகர்வதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.