ஊடக இல்லத்தின் தலைவர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது,
சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்கள்.
புலம்பெயர்ந்த மண்ணில் தனது தமிழ்த் தேசிய பணியை தொடக்கிய பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு, புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை கொண்டுசெல்லும் ஊடகப்பணியை செய்து வந்தார். புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது தேசியப்பணி ஊடாக செய்து வந்தார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது பணியை நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் சாவு தேசியப் பணியில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களுக்கு ‘நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிக்கப்பட்டுவதில் நாம் பெருமை கொள்கின்றோம். அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.