புலியூர்பிரிவில் கொளத்தூர் பகுதி தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.2011 அன்று மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இந்தியாவில் 1984 ஜனவரி முதல் 1986 நவம்பர் வரை ஏறத்தாழ 3 ஆண்டுகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கும்பாரப்பட்டி, புலியூரில் ஆயுதப்பயிற்சி நடைபெற்றது.
முகாமிற்கு தலைமைப் பொறுப்பேற்று பயிற்சி அளித்த தளபதி பொன்னம்மான் நினைவாக புலியூர்பிரிவில் கொளத்தூர் பகுதி பொதுமக்களால் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் எழுப்பப்பட்டது.
தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.2011 அன்று மாலை 06.05 மணியளவில் பெரியார் திராவிடர் கழக சேலம் மாவட்டத்தலைவர் கி.முல்லைவேந்தன் தலைமையில் தாயக மாவீரர் பாடல் ஒலிக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மறைந்த மாவீரர்களுக்கு கவிஞர் அறிவுமதி முதன்மை சுடரை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அண்ணன் அவர்களைத் தொடர்ந்து கொட்டும் மழையிலும் குழந்தைகள் பெண்கள் உட்பட தொடர்ந்து அங்கு கூடியிருந்த 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈகச்சுடர் ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினர். தோழர் சமர்ப்பா குமரன் எழுச்சி இசையைத் தொடர்ந்து கி.முல்லைவேந்தன், டைகர் பாலன், கனகரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கவிஞர் அறிவுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பயிற்சி காலத்தில் புலியூர் பகுதி பொதுமக்களிடம் புலிகள் எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்தனர், நாட்டில் தேசியத் தலைவர் அவர்கள்
போராளிகளை எப்படி தாய் உள்ளத்தோடு வழிநடத்திச்சென்றார், சிங்கள இராணுவத்தினர் புலிகளிடம் சிறைபட்டால் அவர்களை சிங்களவனைப் போல சித்திரவதை செய்யாமல் எப்படி மரியாதையுடன் நடத்தினார்கள் என்பவற்றையெல்லாம் விளக்கி விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி இப்பகுதியில் 1990 முதல் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் முன்னின்று சிறப்பாகச் செய்தனர்.
