Sep 9, 2010
/
பகுதி: இந்திய செய்தி
/
ஒரே நாளில் 1200 பேர் கண் தானம்: ஹைதராபாத்தில் சாதனை
ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1,200 பேர், ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண்தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து 42 கி.மீ தூரத்தில் உள்ளது ரங்கா ரெட்டி மாவட்டம். இதன் செவெல்ல டவுனை அடுத்த தேவுனி எர்ரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கண் தானம் வழங்குவது குறித்து, கிராமத்தில் உள்ள பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரசாரம் மேற்கொண்டனர்.
விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் ஏராளமானவர்கள் கண் பார்வை இழந்து விடுகின்றனர். அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு ஒளிதரும் வகையில், தங்களது மரணத்திற்குப் பின் கண்களைத் தானமாக வழங்குவது ஒரு முன்னுதாரணமான சம்பிரதாயமாகும் என முடிவு செய்தனர் இந்த கிராம மக்கள்.
இதனையடுத்து சுய சிந்தனையுடன் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்த பின், கண்களைத் தானமாக வழங்க முடிவெடுத்தனர்.
இதன் முதற்கட்டமாக 200 பேர், ஹைதராபாத் சரோஜினி தேவி கண் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்று, தங்கள் மரணத்திற்குப் பின் கண்களைத் தானமாக வழங்குவதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர், தங்கள் கண்களைத் தானமாக வழங்குவதாக தெரிவித்து அதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்ட பத்திரங்களையும் மருத்துவமனையின் மேற்பார்வையாளரிடம் வழங்கினர்.
கண் தானம் வழங்குவதன் மூலம் பயனாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து கிராமத்தினரிடையே கடந்த இரண்டு மாதங்களாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த ஊராட்சித் தலைவர் சத்தியநாராயண ரெட்டி, மேலும் 1,100 பேர் கண் தானம் வழங்க முன் வந்துள்ளதாக அறிவித்தார்.
இவர், ஆந்திர மாநில ஊராட்சித் தலைவர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.இதையடுத்து, மாநிலத்திலேயே சிறந்த கிராமமாக எர்ரவள்ளியைத் தேர்ந்தெடுக்க, தொகுதி எம்.எல்.ஏ., ரத்தினம், அரசிடம் சிபாரிசு செய்து வருகிறார்.