அவர்களின் நிலை கண்டு உருகிய தமிழகம் செய்வதறியாத கையாலாகத்தனத்துடன் விழிகளால் நீர் சிந்தியது. சகிக்கப் பொறுக்காத முத்துக்குமாரன்கள் தங்களையே எரி தளல்களாக்கித் தமிழர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கவும் முயற்சித்துப் பார்த்தார்கள். தமிழகத்தின் கொந்தளிப்பை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒரே ஒரு அரைநாள் உண்ணாவிரத நாடகத்துடன் தனக்கான அரசியலாக மாற்றி விட்டார்.
அத்தனை அவலங்களின் பின்னரும்;, ஈழத் தமிழர்கள் தங்களது தோல்விக்குள் சுருண்டு விழுந்துவிடவில்லை. முள்ளிவாய்க்காலை முற்றுப்புள்ளியல்ல, அது இன்னொரு போர்க் களத்தின் ஆரம்பம் என்றே நம்புகின்றார்கள். எங்கள் மீட்பர்கள் மீண்டும் வருவார்கள், எங்களை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மீண்டும் எழுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் தங்களது தேசத்தை மீட்டெடுக்கும் தாகத்துடன் தங்கள் தியாகப் பயணத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனாலும், ஈழத் தமிழர்களது அவலங்களைக் காசாக்கும் ஈனப் பிழைப்புக்களும், முள்ளிவாய்க்கால் அவலங்களுக்கு முகம் பொருத்தி, கை – கால் வைத்து புதிய கதைகள் செய்து எழுத்து வியாபாரம் செய்யும் கோரத்தனமும் தொடர் கதையாகத் தொடர்ந்தே வருகின்றது. எதையாவது செய்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டு விட முடியாமல், இப்போது எமக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தி, மீண்டும் நாம் எழுந்துவிட முடியாமல் செய்யும் சதிகள் வரை இந்த எழுத்து வியாபாரிகள் துணிந்த விட்ட பின்னரும் உண்மைகளை மறைப்பது எமக்கே பாதகமானதாக அமையும் என்பதால் நாமும் மனம் திறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் காட்டில் மழை பொழிவது ஒன்றும் எமக்கு வருத்தமான செய்தி அல்ல. முன்னரும், தமிழீழத் தளத்தில் அவர் உறவு பூண்டிருந்த காலத்தில் அந்த மழை பொழிதல் ஆரம்பமாகியிருந்தது. 1998 காலப்பகுதியில் பிரான்சுக்கு வந்திருந்த கஸ்பர் ராஜ் எனப்படும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களது தமிழீழ ஆதரவுக் கவர்ச்சிப் பேச்சில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். அப்போது பிலிப்பைன்ஸ் மணில்லாவிலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த வத்திக்கானின் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்குப் பொறுப்பாளராகவும் இருந்ததனால், அன்று பாரிசிலிருந்து ஒலிபரப்பாகிய பிரபலமான தமிழ் வானொலியான தமிழ் ஒலி அவருக்கு களம் அமைத்துக் கொடுத்தது.
அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களை முன்நிறுத்தி வானொலி நேயர்களிடம் ஈழத் தமிழ் மக்களுக்காக பெரும் தொகையான நிதி திரட்டப்பட்டு அவரிடம் கையளிக்கப்பட்டது. அந்த நிதி அந்த மக்களுக்குச் சென்றடையவே இல்லை. அது குறித்து அவரிடம் வினவியபோது, அந்தப் பணம் விமான நிலையத்தில் திருடப்பட்டு விட்டதாகப் போட்டாரே ஒரு போடு… அன்றிலிருந்து அவருடனான தொடர்பைப் பெணுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஜெகத் கஸ்பர் எழுதிய தொடர் கட்டுரைகளின் சாரமம், நோக்கமும் புரிந்து கொள்ளப்பட்டதன் காரணமாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானோர் ஜெகத் கஸ்பர் அவர்களை கத்தோலிக்க மேலாடை அணிந்த ஒரு சாத்தானாகவே பார்த்தார்கள். அது இப்போது புலம்பெயர் தமிழர்களின் குழப்பத்தின் உள்ளே நுழைந்து அவர்களைத் துருவப்படுத்தும் முயற்சியில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுத் தலைவர்களையும் களங்கப்படுத்தி களத்திலிருந்து அகற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
கடந்த வாரம் நக்கீரன் வார இதழில் ஜெகத் கஸ்பர் அவர்கள் எழுதிய கட்டுரையின் நோக்கம் வெளிப்படையானது. எங்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவும், எங்களது அவலங்களைக் கண்டு கொதிக்கவும், எங்களுக்கான நீதிக்காகக் குரல் கொடுக்கவும், எங்கள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்தவும் ஆன உரிமை அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. ஆனால், யாரும் நாங்களாக மாற முடியாது. எங்களுக்கான சுயத்திற்குள் யாரும் தலையிட முடியாது. எங்களுக்கேயான எமது வாழ்நிலைக்குள் உள் நுழைய முடியாது. அது திரு. ஜெகத் கஸ்பர் அவர்களுக்கும் பொருந்தும். எங்களுக்கான மேய்ப்பர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை நாங்களேதான் தீர்மானிக்க வேண்டும்.
களமுனைத் தோல்வியால் சலிப்புற்றுள்ள தமிழீழ மக்கள் மத்தியில் விஷ விதைகளை ஊன்றிப் பயிர் செய்ய முயற்சிப்பது ஆபத்தானது. அசிங்கமானது.
‘ஆனையிறவு வெற்றிக்குப்பின் வந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் கே.பி. பதவியிறக்கம் செய்யப்பட்டார். அவர் செய்த தவறுகள் என்னவென்று எனக்குத் தெரியாது. அவரோடு உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குப் பொறுப்பாயிருந்த விடுதலைப் போராட்ட பொறுப்பாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களில் பலர் ஒவ்வொரு செங்கல்லாய் விடுதலைப் பேரியக்கத்தை புலம் பெயர் நாடுகளில் கட்டியெழுப்பியவர்கள்.
அவர்கள் கட்டியெழுப்பிய கோபுரத்தில் அமர்ந்து கோலோச்சப் புறப்பட்டு வந்தவர்கள் ‘காஸ்ட்ரோ குழுவினர்’. இவர்களின் முகமாக வெளிநாடுகளில் இன்று அறியப்படுகிறவர் நெடியவன். தமிழீழ விடுதலைப் போராட் டத்தை சுமார் இருபது ஆண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறவனென்ற வகையில் இந்த விடுதலைப் போராட்டம் இத்துணை மோசமான அழிவினை சந்திக்க பல்வேறு காரணங்களென்றாலும் முதற்காரணம் இந்த காஸ்ட்ரோ குழுதான்.
முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்த காலத்தில் ‘வணங்கா மண்’ கப்பலை வைத்து இவர்கள் அடித்த கொள்ளையின் கணக்கைக் கேட்டாலே தமிழ் வரலாறு காறி உமிழும். இன்றும் உலக அளவில் விடுதலைப் போராட்டம் சேமித்த சொத்துக்களை கட்டுப்படுத்துவது இவர்கள்தான். தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களாய் காட்டிக்கொள்கிற தலைவர்கள் பலரும் இந்த காஸ்ட்ரோ குழுவின் ஆதரவாளர்கள் என்பதும் முக்கியமானது’ என்று எழுதுவதன் மூலம் ஜெகத் கஸ்பர் அவர்கள் எதைச் சாதிக்க முற்படுகிறார் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றாகவே புரியும்.
விடுதலைப் போர்க் களத்தில் களமாடிப் பலியான மாவீரர்கள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் அளவிற்கு, அவர்களது செயற்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு உயிரோடு உள்ள யாரும் தகுதி பெற்றவர்கள் அல்ல. அது ஜெகத் கஸ்பர் அவர்களுக்கும் பொருந்தும். கள முனையில் காயம் பட்டு, இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும் இறுதி மூச்சுவரை தேசியத் தலைவருடன் இணைந்திருந்து, முள்ளிவாய்க்காலில் தன் இறுதி மூச்சையும் அடக்கிவிட்ட எங்கள் காஸ்ட்ரோ குறித்துப் பேசுவதற்கு சாத்தான் ஜெகத் கஸ்பர் தகுதியானவர் அல்ல. காஸ்ட்ரோ அவர்களிடம் வெளிநாடுகளிலுள்ள கட்டமைப்புக்களைக் கையாளும் பொறுப்பை ஒப்படைத்த எங்கள் தேசியத் தலைவர் முட்டாளும் அல்ல.
தலைவனின் ஆணை இதுவென்றால் நஞ்சையும் அமுதாய்க் கருதும் விடுதலைப் புலிகளிடம் புதிய விஷங்களைப் புகுத்த முயல்வது ஆபத்தான விளையாட்டு. எங்கள் தலைவர் எங்களுக்காக உருவாக்கிய கட்டமைப்புக்களை விமர்சிக்கும், ஆராயும் அருகதை யாருக்கும் கிடையாது. விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் சிதைக்கப்பட முடியாத ஆழ் மனத்தில் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான், ஜெகத் கஸ்பர் அவர்கள் செய்ய முயன்ற காரியத்தை ஏற்கனவே மகிந்த சகோதரர்கள் கே.பி. மூலமாக முயற்சித்துப் பார்த்து முடியாமல் சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த இலட்சணத்தில், ஜெகத் கஸ்பர் அவர்களின் ‘தமிழீழ அவலங்களைக் காசாக்கும்’ தொடர் கட்டுரைகளை வெளியிட்டு, தமிழ் மக்களுக்கு ‘கிக்’ ஊட்டியும், சிங்களத்திடம் ஆசி வாங்கியும் விபச்சாரப் பத்திரிகை நடாத்தும் நக்கீரன் ஆசிரிய பீடம் இந்தக் கட்டுரைக்கு ‘ஈழப்பிரச்சினையில் துவக்க காலத்திலிருந்தே எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் உணர்வுபூர்வமாக தமிழினத்தின் பக்கம் நின்று இலங்கை அரசின் கோரமுகத்தை வெளிக்கொண்டுவந்ததில் நக்கீரனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதையும் அதற்கு ஏராளமான ஆதார செய்திகளை தரமுடியும் என்பதையும் லட்சோப லட்ச நக்கீரன் வாசகர்கள் நன்கு அறிவார்கள்’ என்ற முடிவுரையும் கொடுத்துள்ளது வெட்கக்கேடானது.
- ஈழநாடு