பொத்துவிலில் மக்கள் போராட்டம்! வைத்தியசாலையைத் தரமுயர்த்தக் கோரிக்கை!

அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பொத்தவில் ஆதாரவைத்தியசாலையை தரம் உயர்த்துமாறு கோரி மருத்துவத்திற்காய் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் வைத்தியசாலை முன்பு அமைதிப்பேரணி இடம்பெற்றது.
 
இதில் கலந்து கொண்ட மக்கள் பறிக்காதே பறிக்காதே எங்களது உரிமையைப்பறிக்காதே, மாகாண அதிகாரத்தில் இயங்கும் ஆதாரவைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் தரமுயர்த்து போன்ற கோஷங்களையும் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

பொத்துவில் ஆதாரவைத்தியசாலையினை எந்தவொரு அரசியல்வாதிகளும், அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. இங்கு நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய்யமாறும் மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

பொத்துவில் ஆதாரவைத்தியசாலை தரம் உயர்த்தப்படாத காரணத்தினால் இப்பிரதேசத்திலுள்ள நோயளிகள் உரிய சிகிச்சையினை பெற்றுக்கொள்வதில் சிரமங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

பொத்துவிலிருந்து அம்பாறை வைத்தியசாலை 71 கிலோமீற்றர் தூரமாகும். அதேபோல் கல்முனை வைத்தியசாலையும் 71 கிலோமீற்றர் தூரமாகும். மோனராகல வைத்தியசாலையிலிருந்து 67 கிலோமீற்றர் தூரத்திலும் அக்கரைப்பற்று வைத்தியசாலையிலிருந்து 47 கிலோமீற்றர் தூரத்திலும் பொத்துவில் வைத்தியசாலை அமைந்துள்ளது.

இவ் இடைப்பட்ட தூரத்திற்குள் நோயாளர்களைக் கொண்டு செல்லும் போது இடைநடுவில் பல உயிர் இழப்புக்களம் ஏற்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. 1907 ஆம் ஆண்டு கிராமிய வைத்தியசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை 1998 இல் மாவட்ட வைத்தியசாலையாகவும், 2007 ஆம் ஆண்டு ஆதாரவைத்தியசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இன்றுவரை பொத்துவில் ஆதாரவைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படாதுள்ளது. இதனை கண்டித்து பொத்துவில் பொதுமக்களினால் அமைதிப்பேரணி நடைபெற்றது.

இங்கு மக்களினால் இங்கு நிலவும் சிற்றுழியர்கள் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும், வைத்திய நிபுணர்கள், பொது வைத்தியநிபுணர்கள், மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், சிறுபிள்ளை வைத்திய நிபுணர்கள், அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும்.

நிரந்தர வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்படவேண்டும், வெளிநோயாயர் பிரிவு, மருந்தககாப்பகம், அதிதீவிர சிகிச்சை பிரிவு, விடுதி வசதிகள், உட்பட சகல வசதிகளும் ஏற்படுத்திதரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments