அதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது! பனங்காட்டான்

வடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட்ட நடவடிக்கையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காப்பாற்ற கூட்டமைப்பு கட்டிப்பிடிக்கும் புதிய கொள்கையும, தமிழ்த் தேசிய அரசியலில் அதன் இலக்கை மறந்து கதிரைகளின் ஓட்டப்போட்டிக்கு வழிவகுத்துள்ளது.

இந்தவார பத்தியை மறைந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், தமிழ் நாட்டின் முதலமைச்சராக  ஐந்து தடவை பணியாற்றியவருமான கலைஞர் மு. கருணாநிதி சம்பந்தப்பட்தாக இருக்கவேண்டும் என பலரும் விரும்பலாம்.

இவ்வாரம் அவர் தொடர்பான பல கட்டுரைகள் பலகோணப் பார்வையில் இடம்பெறலாம் என்ற காரணத்தால் எனது பார்வையை இன்னொரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளேன்.
மறக்கமுடியாத, மறைக்கமுடியாத, மன்னிக்கவும் முடியாத ஓர் அரசியல் ஆளுமை பற்றி அவர் மறைந்த ஓரிரு நாட்களுக்குள் எழுதுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என்ற பார்வை ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

இதற்கான காரணம், ஈழத்தழிழரிடையே உள்ள நல்லதொரு குணாம்சம். மறக்கக்கூடாத பல விடயங்களை, அரசியல் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களை காலக்கிரமத்தில் மறந்து விடுவதே அந்த நல்ல குணாஅம்சம்(?).

அரசியல் தீர்வா அல்லது அதிகாரப்பகிர்வா அல்லது தாமதற்ற அபிவிருத்தியா என்ற எல்லாம் கெட்டு, பதவி ஆசைப்போட்டியில் எதுவுமே புரியாதுள்ள ஈழத்தமிழரின் அரசியல் அரங்கு, இப்போது அதன் செல்நெறிப்பாதை மறந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது.
இதனையே கொஞ்சம் உட்சென்று விபரமாக நோக்கலாம்.

வடமாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையப்போகிறது. அதற்கிடையில் ஏழரைச்சனியனோ, அட்டமத்து வியாழனோ பல நெருக்குவாரங்களை ஏற்படுத்திக்கொண்டி ருக்கிறது.

அணைத்துக்கொண்டு வந்தவர்கள் அடித்து துரத்த எத்தனிக்கிறார்கள் என்று எங்கோ ஓரிடத்தில் ஒருவர் குறிப்பிட்டது போல, முதலமைச்சர் விக்னேஸ்வரனை அப்புறப்படுத்த தமிழரசுக்கட்சியின் முக்கிய பகுதியினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை இப்போது எங்களால் பார்க்க முடிகிறது.
டெனீஸ்வரன் என்ற பதவியிழந்த அமைச்சரின் பொறுப்புக்களை இப்போது மூன்று அமைச்சர்கள் பகிர்ந்து செயற்படுத்துகின்றனர்.

மேல்நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி (கவனிக்கவும் - இது இடைக்கால உத்தரவு மட்டுமே) டெனீஸ்வரன் தெடார்ந்து பதவி வகிக்கிறார் என்று கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் இவரை அந்தக் கதிரையில் அமர்த்துவதானால, ஏற்கனவே பதவி வகிக்கும் இரு அமைச்சர்கள் அதிலிருந்து இறங்க நேரிடலாம்.

இதனாலோ என்னவோ, முதலமைச்சரான நீதியமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்ற இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், தமது பக்க நியாயத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.

“நான் ஒரு சட்டத்தரணி, முதலமைச்சர் நீதியரசராக பதவி வகித்தவர். எங்களுக்குள் யாருக்கு சட்டம் தெரியும் என்பதை பார்ப்போம்” என்று டெனீஸ்வரன் சவால் விடுகிறார் என்றால் அவரது மனதின் உட்கிடக்கை புரிகிறது.

மறுபுறத்தில், அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் என்பவர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதலமைச்சருக்கு ஒரு பாடம் படிப்பிக்க எதிர்க்கட்சி தலைவர் தவராசாவை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்.

ஆக, இரண்டு தரப்புகளுக்குள்ளேயும் கதிரைச் சண்டை நீண்டு செல்கிறது.
நாடாளுமன்ற உறுபப்பினர் சுமந்திரனும் அவரது கம்பனியினரும் முதலமைச்சர் மீது இவ்வருட முற்பகுதியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முனைந்து கலைந்ததும், இதனை அவரின் எடுபிடியாக செயற்படும் அவைத்தலைவர் முன்னின்று இயங்கியதும், ஈற்றில் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானதும்... இதன் தொடர்ச்சியாகவே டெனீஸ்வரன் விவகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

இது போன்ற இன்னொரு கதிரைச்சண்டை யாழ்ப்பாண மாநகரசபையில் ஆரம்பமாகியுள்ளது.
இச்சபைக்கான தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றபோது கூட்டமைப்பின் அணிக்கு ஆர்னோல்டும், தமிழ்க் காங்கிரசின் அணிக்கு மணிவண்ணனும் தலைமை தாங்கினார்கள். இருதரப்பிற்கும் அறுதிப்பெரும்பான்மை எட்டவில்லை.

சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணங்கிப்போய் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு நகர முதல்வர் பதவியை கைப்பற்றியது. ஆர்னோல்ட் நகர முதல்வராக மணிவண்ணன் எதிர்க்கட்சியின் தலைவரானார்.

ஆரம்பதிலிருந்தே தமது தெரிவில் வந்த ஆர்னோல்டுக்கு மணிவண்ணன் சவாலான அரசியல் ஆளுமையாக இருப்பது சுமந்திரனுக்குப் பிடிக்கவில்லை அதுமட்டுமன்றி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வலதுகரமாக மணிவண்ணன் இருப்பதால் துளிகூட அவரை சுமந்திரன் விரும்பபவில்லை.

சட்டத்திலுள்ள ஓட்டைக்குள் புகுந்து, தமக்குச் சாதகமாக தீர்ப்பு பெறக்கூடிய கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்து, அதில் வழக்காளி சார்பில் நேரடியாக ஆஜரான சுமந்திரன், மாநகரசபைக் கூட்டத்தில் மணிவண்ணன் பங்குபற்றுவதை தடைசெய்யும் இடைக்கால தடைத் தீர்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளார். நகர முதல்வர் பதவிக்கு அருகதையற்றவராக அவரது சகாக்களாலேயே கணிக்கப்படும் ஆர்னோல்டின் கதிரையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி இது.

ஈ.பி.டி.பியின் உதவியுடன் பின்கதவால் கைப்பற்றிய கதிரையை காப்பாற்ற, தமிழக்; காங்கிரசின் முதன்மை உறுப்பினரை கதிரையிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் இடைக்கால வெற்றி பெற்றுள்ளார்.

இது இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழரும் மனதில் இருத்திக்கொள்வர்.

இனி, சிங்கள தேசிய அரசியலில் இரண்டறக் கலந்து நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் வகிபாகத்தையும், அவர்கள் பறிகொடுக்கவிரும்பாத கதிரையையும் பார்க்கலாம்.
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக 2015ஆம் ஆண்டிலிருந்து கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான இரா. சம்பந்தன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த தேர்தலில் திருமலை மாவட்டத்திலிருந்து தெரிவான ஒரேயொரு தமிழ் உறுப்பினர்.
2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பு மைத்திரி மற்றும் ரணில் கூட்டுக்;கு ஆதரவளித்தது. இதனால் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கூட்டமைப்புக்கு பெரும் பங்குண்டு.

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஆட்சி பீடத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்ற தாயகத்தழிழரின் விருப்பு, கூட்டமைப்பு மைத்திரி ரணில் அணிக்கு வழங்கிய ஆதரவுக்கு வலிமை சேர்த்து, அவர்களின் இருப்பைப் பெறுமதியாக்கியது.

2015 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முதலிடத்தையும,; சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாவது இடத்தையும் பெற, 16 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 ஆம் இடத்திற்கு வந்தது. முதலிரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததால் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.

தேர்தல்களில் வழங்கிய ஆதரவுக்காக நல்லாட்சி அரசு வழங்கிய வெகுமதி எனவும் இதனைச் சொல்லலாம். இதற்கு நிறையக் காரணங்களும் உண்டு.

காலக்கிரமத்தில் சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினரும் இடதுசாரிகளைக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினரும் சேர்ந்து எழுபது பேராகி, உத்தியோகப்பற்றற்ற புதிய எதிரணி ஒன்று நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது.

எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் 16ஐ விட 70 அதிகம் என்பதால, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கே வேண்டுமமென புதிய எதிரணி கேட்கத் தொடங்கியது.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் இவர்களுக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றியுமே எதிர்க்கட்சி பதவியை கேட்கும் துணிச்சலைக் கொடுத்தது.

விரைவில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தப்பதவி தங்களுக்குச் சாதகமாக அமையும் என்பது இவர்களது யதார்த்தமான சிந்தனையாக உள்ளது.

இப்பதவியின் எதிர்காலம் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கையிலுள்ளது. இவர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருப்பதால், ரணிலின் விருப்பிற்கு மாறாக இவர் செயற்படும் சாத்தியம் இல்லை.

அடுத்த வருட கடைசிப் பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரணில், தழிழர் வாக்குகளை எத்திப்பறிக்க கூட்டமைப்பையே நம்பியிருக்கும் நிலையில, இப்போதைக்கு சம்பந்தனுக்கு அந்தக் கதிரை ஆட்டம் காணாது என நம்பலாம்.

ஆனால் அரசியலில் எதுவுமே நடைபெறலாம்.
1977ல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தலில் இரண்டாமிடத்திற்கு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான அ.அமிர்தலிங்கம், முன்கதவு வழியாக சட்டப்படி எதிர்க்கட்சத்p தலைவரானார்.

பின்னொரு நாள், அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன, அமிர்தலிங்கத்தை  அக்கதிரையில் இருந்து வீழ்த்தி, சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அனுர பண்டாரநாயக்காவை அக்கதிரையில் அமர்த்தினார்.

அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி நடவடிக்கை என்று பலவற்றை எதிர்பார்த்திருக்கும் கூட்டமைப்பு, இவைகளைப் பெற எவ்வகையிலும் உதவாத எதிர்க்கட்சித் தலைவர் பதவியால் எதனைப்பெற போகிறது?

2020 பொதுத்தேர்தலில் தமிழர் வாக்குகளை எவ்வாறாவது பெற வேண்டுமானால், தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்னராவது இப்பதவியை அவர் துறக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது.
இதுதான் அரசியல் யதார்த்தம் என்பது சம்பந்தனுக்கு தெரியாததோ, புரியாததோ அல்ல.

No comments