வாள்வெட்டுக் குழுக்களுடன் பொலிசாருக்கு நெருங்கிய தொடர்பு



வாள் வெட்டுக்குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மராட்சி பகுதியை சேர்ந்த 07 இளைஞர்களை மானிப்பாய் பொலிசார் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு எதிராக வாள் வெட்டு தொடர்பிலான வழக்குகள் , நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் , மேலும் ஒன்பது பேரை தாம் தேடி வருவதாகவும் மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்,  கைது செய்யப்படவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிசாருக்கும் , கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பது கண்டறிந்துள்ளோம்.

அதனடிப்டையில் இளைஞர்களின் கையடக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து விசரானைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்களையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் மானிப்பாய் பொலிசார் முற்படுத்தினார்கள்.

அதன் போது இளைஞர்கள் சார்பில் முன்னிலையான வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் "கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்தப்பட்டு உள்ளதாகவும் ,அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் பிணை விண்ணப்பம் செய்தார்.

குறித்த பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிவான் ஏழு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து கைக்கோடரி , வாள்கள் , கை கிளிப் போன்றவற்றை மீட்டோம் என மானிப்பாய் பொலிசார் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments