வலைஞர்மடத்தில் புதையல் தேடும் காவல்துறை!

இலங்கையின் முப்படைகளும் சூறையாடி ஓய்ந்த இறுதி யுத்த பூமியில் புதையல் தோண்டுவதில் இலங்கை காவல்துறை தற்போது மும்முரமாகியுள்ளது.

இறுதி யுத்த பிரதேசங்களில் ஒன்றான வட்டுவாகல் பகுதியில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், தேசிக்காய் வெட்டப்பட்டு, நிலத்தைத் தோண்டிய அடையாளம் இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில், காவல்துறை உடை அணிந்த சிலர், மூன்று வாகனங்களில் வந்து நின்று சென்றுள்ளதை, பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில், நேற்று (31) முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளவென, உள்ளுர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலை பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றில், மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில், அகழ்வுப் பணிகள் நேற்று முன்தினம் (30) முன்னெடுக்கப்பட்டன. இன்போது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக இயந்திரத் துப்பாக்கியின் தோட்டாக்களும் விடுதலைப் புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, வலைஞர்மடம் பகுதியிலும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அகழ்வுப் பணி முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், குறித்த பகுதிக்கு நீதிமன்ற பணியாளர்கள்; வருகை தராத காரணத்தால், குறித்த அகழ்வுப் பணி பிற்போடப்பட்டுள்ளது.

No comments