மாநகரசபை வெடிப்பு -பழிவாங்கல் கொலை:படையினருக்கு மரணதண்டனை!

யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பினையடுத்து பழிவாங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பில்;  இலஙகை இராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் இருவருக்கு 20 வருடங்களின் பின்னர் தூக்குத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரண்டு நாள்களில் சடலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் அப்போது கடமையிலிருந்த 51ஆவது படைப்பிரிவின் தளபதி முதலாம் எதிரியாகவும், யாழ்ப்பாணம் 512ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி இரண்டாம் எதிரியாகவும், திருநெல்வேலி இராணுவ முகாம் இராணுவ அதிகாரி மூன்றாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய தினம் காலை பதினொரு மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பை திறந்த மன்றில் அறிவித்தார்.

முhநகரசபை குண்டுவெடிப்பில் இலங்கை பாதுகாப்பு படையினரின் மூத்த உறுப்பினர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர். யாழ்ப்பாண நகர தளபதி பிரிகேடியர் சுசந்த மென்டிஸ் மற்றும் அவரது பிரதான அலுவலக உத்தியோகத்தர் கேப்டன் ராமநாயக்க ஆகியோர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் யாழ்ப்பாண பொலிஸ் மா அதிபர் மோகனதாஸ், பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சந்திர பெரேரா, ஏ.எஸ்.பி. சரத் பெர்னாண்டோ, ஏ.எஸ்.பி. சந்திரமோகன் ஆகியோரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து சுசந்த மென்டிஸ் பணியிலிருந்த 524வது படைப்பிரிவினால் குறித்த இளைஞர் கைதாகி அடித்துக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments