மத்தலவில் தரையிறங்கும் இராட்சத விமானங்கள்


உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான, அன்ரனோவ் ஏஎன்-124 ருஸ்லான், மத்தல விமான நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் தரையிறங்கியது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவுமே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியிலேயே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது. இன்று அதிகாலை 1.40 மணியளவில், மஸ்கட் நோக்கி புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்டிருந்தது.

உலகின் மிகப் பெரிய விமானங்களில் ஒன்றான ஏஎன்-124  கனரக மற்றும் பருமமான சுமைகளை ஏற்றுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை விமானம் சிறிலங்காவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும்.

ஏற்கனவே உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான ஏஎன்-225 கடந்த ஏப்ரல் 19ஆம் நாள் மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments